உலக தத்துவஞானிகள்!
13 Oct 2014
தத்துவத்தைக் குறிக்கும் Philosophy என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து பிறந்தது. கிரேக்க மொழியில் Philos என்றால் விரும்புபவர் என்று பொருள். Sophia என்றால் அறிவு. அறிவின் விருப்பம் Philosophy எனப்பட்டது.
மேற்கத்திய தத்துவம், கிழக்கு தத்துவம் என தத்துவங்கள் அவை பிறப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டு இரு வகையாகப் பிரிக்கப்பட்டன. மேற்கத்திய தத்துவம் கிரீஸில் தோன்றியது. கிழக்கு தத்துவம் உலகின் கிழக்கு பகுதிகளான இந்தியா மற்றும் சீனாவில் பிறந்தது.
இந்திய தத்துவம் மற்றும் சீன தத்துவம் ஆகியவை கிழக்கத்திய தத்துவத்தின் பள்ளிகளாகத் திகழ்ந்தன. கிழக்கு தத்துவம், மதத்தின் அடிப்படையில் அமைந்தது. கிழக்கு தத்துவத்தின் ஆசிரியர்களாக சீனத்து அறிஞர்களான கன்பூஷியஸ் மற்றும் லா சூ ஆகியோர் விளங்கினர்.
பாரம்பரியமாக தத்துவம் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டது. அவை: மெய்ஞானவியல், அறிவாதார இயல், தர்க்கம், அறநெறி, அழகியல் ஆகியவை ஆகும்.
தத்துவத்தை அறிய இரண்டு முக்கிய வழிகள் பின்பற்றப்பட்டன. அவை: பகுப்பாய்வுத் தத்துவம் மற்றும் தொகுப்பாய்வுத் தத்துவம் எனப்பட்டன.
கி.மு. 563 483 காலத்தில் இந்தியாவில் (தற்சமயம் நேபாளம்) பிறந்து வளர்ந்த புத்தர் நான்கு உண்மைகளைக் கண்டறிந்தார். அவை: துக்கத்தின் இருப்பு, துக்க காரணம், துக்க நீக்கம் மற்றும் துக்க நீக்கமாகிய நிலையினிற் செலுத்தும் நெறி.
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த மைலிட்டஸைச் சேர்ந்த தால்ஸ் என்ற கிரேக்க தத்துவஞானி, மேலை நாட்டு தத்துவ இயலுக்கு வித்திட்டவர். இப்பிரபஞ்சத்தின் மூல ஆதாரப் பொருள் நீராக இருந்திருக்கலாம் என்ற சிந்தனைக்கு வித்திட்டவர் இவரே.
கிரேக்க தத்துவ மேதை பிதகோரஸ் (கி.மு. 580 500) அவர்களின் தத்துவம் எல்லாவற்றுக்கும் எண்ணியல் தொடர்பான விளக்கங்களை அளிக்க முற்படுகிறது. ‘பிதகோரஸ் தேற்றம்’ இவரை என்றும் நினைவில் நிறுத்துகிறது.
சீனத்து தத்துவ மேதை கன்பூஷியஸ் (கி.மு. 551 479) கல்வி என்பதை சுயமுன்னேற்றத்திற்கான தொடர் செயல்பாடு என்றார்.
கி.மு. 515 வாக்கில் தோன்றிய கிரேக்க தத்துவஞானி பர்மினடீஸ் எழுதிய ‘ஆன் நேச்சர்’ என்ற நெடுங்கதையிலிருந்து ஒரு சில பகுதிகளே கிடைத்துள்ளன. ‘மாறுதல்’ என்பதும் ‘இல்லாதது’ என்பதும் தர்க்கத்துக்குப் பொருந்தாதவை என்பது இவர் கோட்பாடு.
பிளாட்டோ (கி.மு. 427 - 347) கிரேக்க தத்துவஞானி. இவருடைய ஆசிரியர் சாக்ரடீஸ். மாணவர் அரிஸ்டாட்டில். பிளாட்டோ என்பது இவரது பரந்த அறிவைக் குறிக்கின்றது.
தத்துவஞானி சாக்ரடீஸ் கி.மு. 470ல் கிரேக்கத்தில் ஏதென்ஸ் நகரில் பிறந்தார். துருவிக் கேட்கும் கேள்விகள் மூலம் அவரோடு உரையாடுபவரின் பேசுபொருள் குறித்த அறியாமையை உணர்த்துவது சாக்ரடீஸின் பழக்கம். இத்தகைய குறுக்கு விசாரணை முறை, கற்பிக்கும் நுணுக்கமாக பயன்படுகிறது. இளைஞர்களைக் கெடுத்ததாகவும், கடவுள் இல்லை என்கிறார் எனவும் குற்றம் சாட்டப்பட்டு ஹெம்லாக் எனும் நஞ்சு கொடுத்து கி.மு.399ல் இவர் கொல்லப்பட்டார்.
கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில் (கி.மு. 384322) உருவாக்கிய தர்க்க சாஸ்திரம் ‘மும்மடி நியாயம்’ என்று அழைக்கப்பட்டது. இவருடைய கோட்பாடுகள் தத்துவஞான விவாதங்களில் இன்னமும் செல்வாக்கு கொண்டவையாகவே திகழ்கின்றன.
கி.மு. 280ல் சீனாவில் வாழ்ந்த ஹான் ஃபெய்ஸியின் தத்துவங்களால் மா சே துங் கவரப்பட்டார். ஷி ஹுங்டி என்ற அரசரின் கவனத்தைக் கவர்ந்த இவர் லி ஸி அரசரால் சிறையில் அடைக்கப்பட்டு விஷம் கொடுத்து கொல்லப்பட்டார். இவரது ‘லீகலிஸம்’ சீன மக்களால் போற்றப்பட்ட தத்துவமாகும்.
கி.பி. 55 135ல் வாழ்ந்த கிரேக்க தத்துவஞானி எபிடெட்டஸ் சுக துக்கங்களால் பாதிக்கப்படாது இருத்தல் எனும் ஸ்டோயிஸிஸம் என்ற துளங்கா மனநிலைக் கொள்கையோடு தொடர்புடையவர்.
பிளாடினியஸ் கி.பி. 205லிருந்து 270 வரை வாழ்ந்த ரோமானிய சிந்தனையாளர். உலக அறிவைப் பெறுவதே இவரது குறிக்கோள்.
அவிசென்னா (980 1037) ஈரானைச் சேர்ந்த இஸ்லாமிய தத்துவமேதை. இவருடைய கேனன் ஆஃப் மெடிசன் எனும் நூல், சிறந்த மருத்துவப் படைப்புகளில் ஒன்றாகும்.
இங்கிலாந்து நாட்டில் கேன்டர்பரியைச் சேர்ந்த புனிதர் ஆன் ஸெல்ம் (1033 - 1093) கடவுளின் இருத்தலைப் பற்றிய மெய்ப்பொருள் விவாதத்தை நிறுவிய ‘ப்ராஸ்லாக்கியம்’ என்னும் நூலை எழுதினார். கடவுள் ஏன் மனிதன் ஆனார் என்ற இவரது நூல் யேசுவின் மனிதநேயம் பற்றியது.
மோசஸ் மைமோணைட்ஸ் (1135 1204) என்ற யூத தத்துவஞானி எழுதிய சமயத் தத்துவம் சார்ந்த ‘தி கெஸ்ட் ஆஃப் தி பெர்ப்ளெக்ஸ்டு’ என்ற நூல், யூத மதத்துக்குப் பகுத்தறிவு சார்ந்த அணுகுமுறையை முன் வைத்தது. இந்த நூலில் அரிஸ்டாட்டிலின் தாக்கம் காணப்பட்டது. சமய சுதந்திரம் வேண்டி ஸ்பெயினுக்குச் சென்ற இவர், பிறகு எகிப்தில் குடியேறினார்.
அவெர்வீஸ் (இபின் ரஷித்) ஸ்பானிய அராபிய தத்துவஞானி ஆவார். அரிஸ்டாட்டிலின் படைப்புகள் குறித்த இவரது விளக்கங்கள் பிந்தைய நூற்றாண்டுகளில் யூத மற்றும் கிறிஸ்துவ அறிஞர்களிடையே நிறைய தாக்கத்தை ஏற்படுத்தின.
தத்துவத்தின் ஒளி விளக்குகளாகத் திகழ்ந்த இவர்களைத் தொடர்ந்து தத்துவத்தின் எழுச்சியாக மாக்கியவல்லி (இத்தாலி), செயின்ட் அல்பான்ஸ் வைகவுண்ட் பிரான்சிஸ் பேகன் (இங்கிலாந்து), வால்டேர் (பிரான்ஸ்) உட்பட பல தத்துவஞானிகள் தோன்றினர்.
நவீன தத்துவஞானிகளான ஆதம்ஸ்மித் (இங்கிலாந்து) எமர்சன் (அமெரிக்கா), காரல் மார்க்ஸ் (ஜெர்மனி) உட்பட பலரது தத்துவங்களால் உலகம் செழுமையடைந்தது.
இந்தியாவில் மனு, மகாவீரர், சாணக்கியர், ஆதிசங்கரர், சுவாமி விவேகானந்தர், அரவிந்தர், திருவள்ளுவர், ரவீந்திரநாத் தாகூர், ஜெ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மிகச் சிறந்த தத்துவஞானிகளாகத் திகழ்ந்தனர்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.