Monday, 22 May 2017
விடத்தலை கற்பம்....போகர்......
சித்தர்கள் இராச்சியம்
▼
15 Feb 2013
போகர் அருளிய விடத்தலைக் கற்பம்
எளிய வகை காய கற்பங்களின் வரிசையில் இன்று “விடத்தலை கற்பம்” பற்றி பார்ப்போம். கற்ப வகைகளைப் பற்றி முன்னரே பல பதிவுகளில் விரிவாக விளக்கியிருப்பதால் இன்று நேரடியாக கற்பத்தைப் பற்றி பார்ப்போம். புதியவர்கள் மற்றும் தேவையுள்ளோர் கற்பங்களைப் பற்றிய பழைய பதிவுகளை இந்த இணைப்பில் வாசிக்கலாம்.
விடத்தலை என்பது மர வகையினைச் சேர்ந்த ஒரு மூலிகை. நவகோள்களில் ஒன்றான சனியின் அம்சமாய் இந்த மரத்தினை குறிப்பிடுவர். இந்த மரத்தின் தாவரவியல் பெயர் “mimosa cinerea” என்பதாகும். இந்த மரம் பற்றிய மேலதிக விவரங்கள் இங்கே அறியலாம்.
விடத்தலை கற்பம் என்பது மரணத்தை வெல்லும் அல்லது உடலை அழியாது காக்கும் தன்மையுடையது என யாகோபு முதல் பல சித்தர்கள் கூறியிருக்கின்றனர். யாகோபு அருளிய விடத்தலை கற்பம் பற்றி ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன். இன்றைய பதிவில் இடம் பெறும் விடத்தலை கற்பத்தின் செய்முறை போகர் அருளியது. இந்த தகவல் போகர் அருளிய "போகர் 7000" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
மாறவே விடத்தேரின் வேர்ப்பட்டைவாங்கி
மருவநன்றா யிடித்தரித்துச் சூரணமாக்கி
தாறவே பலம்நாலு நிறுத்தக்கொண்டு
தளுக்கான சூதமது பலந்தானாலு
கூறவே குலாமல்லிச் சான்றினாலே
குலாவியரைத் தெண்சாமம் சூரணித்து
தேறவே நாற்பது நாள் தேனிர்கொள்ளு
சில்விஷமாம் பதினெட்டுக் குட்டம்போகும்
விண்டிடவே வெள்ளெழுத்து மாறிப்போகும்
மாசற்ற வயிரம்போல் தேகமாமே
மருத்துவ குணங்கள் நிரம்பிய இந்த விடத்தலை மரத்தின் வேர் மற்றும் பட்டையை எடுத்து நன்கு இடித்துச் சூரணமாக செய்து கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்தச் சூரணத்தில் இருந்து நான்கு பலம் அளவு எடுத்து, அதனுடன் இரசம் நான்கு பலம் சேர்த்து, மேலும் குலாமல்லிச் சாறு விட்டு, எட்டுச் சாமம் வரை தொடர்ந்து அரைக்க வேண்டுமாம். பின்னர் இந்த கலவையை நிழலில் உலர்த்தி சூரணமாகச் செய்து கொள்ள வேண்டும் என்கிறார்.
தினமும் இந்த சூரணத்தில் இருந்து வெருகடி* அளவு எடுத்து தேனில் கலந்து உண்ண வேண்டுமாம். இவ்வாறு தொடர்ச்சியாக நாற்பது நாட்கள் உண்டு வந்தால் உடலானது மாசற்ற வைரம்போல் வலிமை பெறுவதுடன், பதினெட்டு குட்டங்களும் நீங்கி, வெள்ளெழுத்தும் மாறிப்போகும் என்கிறார்.
*வெருகடி = வெருகு என்பது காட்டுப் பூனையை குறிக்கும். வெருகடி என்பது பூனை தன் காலில் உள்ள பெருவிரல் உள்ளிட்ட மூன்று விரல்களினால் எடுக்கும் மண்ணின் அளவு. பழந்தமிழர் அளவை குறியீடுகளில் வெருகடியும் ஒன்று.
சூரணம் - ஈரமானவைகளை காய வைத்தும், காயந்தவைகளை சுத்தமாக்கியும், வறுக்க வேண்டியவைகளை வறுத்தும் இடித்தோ அரைத்தோ பொடியாக்கி சலித்து எடுத்துக் கொள்வது.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.