Monday, 22 May 2017
போகர் அருளிய கருநெல்லி......
போகர் அருளிய "கருநெல்லி" கற்பம்
நெல்லி "Emblica offinalis" குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இது மலைப் பகுதிகளில் வளரும் இயல்புடையது. தற்போது இவை சமவெளிகளிலும் பயிரிடப் படுகிறது. இவற்றில் அரி நெல்லி, பெரு நெல்லி என இரு வகைகள் உண்டு.
சித்தரியலில் நெல்லி மரம் ஆதி சிவனின் அம்சமாகவே கூறப் படுகிறது. முக்குற்றங்களையும் போக்கும் ஆற்றல் நெல்லிக்கு உண்டென கூறியிருக்கின்றனர். நெல்லி மரத்தின் இலை, பட்டை, வேர், வேர்ப்பட்டை, காய், பழம், காய்ந்த பழம், பூ, விதை என எல்லா பாகங்களும் அரு மருந்தாய் பயன்படுகின்றன.
பெருநெல்லியின் ஒரு வகைதான் கருநெல்லி ஆகும். கருநெல்லி மரத்திற்கு செல்வ மரம் என்றொரு பெயரும் உண்டு. இது மிகவும் அரிதானது, மலைபிரதேசங்களில் மட்டுமே விளையக் கூடியவை. பலரும் நிணைப்பதைப் போல் இந்த வகை நெல்லிக்காய்கள் கருப்பாய் இருப்பதில்லை. அதே நேரத்தில் சந்தையில் கிடைக்கும் பெருநெல்லியின் அளவில் இருந்தாலும் இதன் நிறம் சற்றே மஞ்சள் பூத்த பசுமை நிறத்துடன் இருக்கும்.
இது எளிதில் கிடைப்பதில்லை. நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து வாங்கிடலாம். கருநெல்லி மற்றெந்த நெல்லிக்காய்களை விடவும் சிறப்பான மருத்துவத் தன்மை கொண்டவை. இத்தனை சிறப்புகள் வாய்ந்த எளிய கருநெல்லி கற்பம் ஒன்றினை இன்று பார்ப்போம்.
போகர் அருளிய "போகர் 12000" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
ஏமமாங் கருநெல்லி மலைதோருமுண்டு
எழிதாகக் கிடையாட்டால் தேடிப்பெற்று
நாமமாம் நாற்பதுநாள் பாலிற்கொள்ளு
நமன்வந்து நாடாமல் நடுங்கிப்போவான்
தாமமாஞ் சட்டையெல்லாங் கக்கிப்போடும்
தங்கம்போல் மேனியுமாய்த் தளுக்காய்க்காணும்
ஆடவே கருநெல்லிப் போக்குச்சொல்ல
அரன்காணார் யாந்தானுங் கண்டிலேனே.
தினமும் கருநெல்லியை பாலுடன் சேர்ந்து உண்ண வேண்டும். இவ்வாறு தொடர்ந்து நாற்பது நாட்கள் உண்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேறி, உடலானது தங்கம்போல் மின்னும் என்கிறார். மேலும் எமன் கூட நெருங்க மாட்டான் என்றும் சொல்கிறார். இந்த கற்பமுறைக்கு பத்தியம் ஏதும் கூறப்படவில்லை.
மிகவும் எளிதான, மலிவான கற்பம். இதனால் உடலுக்குக் கிடைக்கும் பலனோ மகத்தானது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.