Monday, 22 May 2017

போகர்......

சித்தர்கள் இராச்சியம் ▼ 28 May 2012 போகர் ஜாலவித்தை! சித்தர்கள் என்றாலே அரிதான எட்டு விதமான சித்துக்களையும், வாய் பிளக்க வைக்கும் ஜாலங்களையும் நிகழ்த்திக் காட்டுகிறவர்கள் என்பதான பொதுக் கருத்து உண்டு. இந்தக் கருத்தினை முற்றாக நிராகரித்து விடவும் முடியாது. ஏனெனில் சித்தர்களின் பாடல்களின் ஊடே இம் மாதிரியான ஜாலங்களைப் பற்றிய தகவல்கள் காணக் கிடைக்கின்றன. இவை எதற்காக சொல்லப் பட்டது என்பதும், அதன் பின் புலத்தில் மறைந்திருக்கும் உட் கருத்துக்களும் ஆய்வுக்கு உட்பட்டவை. இந்த வாரத்தின் நெடுகில் அப்படியான சில சித்துக்களை பார்க்க இருக்கிறோம். இன்றைய பதிவில் போகர் தனது “போகர் ஜாலவித்தை” என்னும் நூலில் அருளியிருக்கும் ஒரு ஜால வித்தை பற்றி பார்ப்போம். ஒரு குடத்தில் நீரை அள்ளி அந்தக் குடத்தினை தலைகுப்புற கவிழ்த்தாலும் பானையில் உள்ள நீர் கீழே சிந்தாதிருக்கும் ஜாலத்தை போகர் பின் வருமாறு கூறுகிறார். நடந்தபின்பு இன்னமொரு ஜாலங்கேளு நல்லமயி ரோசனையும் மத்தக்காசும் அடர்ந்ததொரு நாற்கரந்தை வயன்றவேரும் அரசமர வேருடனே இந்த நான்கும் குடத்துள்ளே சமனிடையாய் அறைத்துப்பூசி குளங்கிணற்றில் ஜலமதனை மொண்டுவந்து அடைத்திருங்குஞ் சபைதனிலே கவிழ்த்துக்காட்டில் அணுவளவு ஜலங்கீழே வீழா தாமே. கோரோசனை, மத்தக்காசு, கரந்தை வேர், அரசமர வேர் ஆகிய நான்கினையும் சம எடையில் எடுத்து தூய்மை செய்து, அவற்றை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டுமாம்.பின்னர் இந்த கலவையை குடத்தின் உட்புறத்தில் நன்றாக பூசி உலர வைக்க வேண்டும் என்கிறார். இந்த கலவை நன்கு காய்ந்த பின்னர் இந்த குடத்தில் நீர் எடுத்து அதனை கவிழ்த்தால் சிறிதளவு நீர் கூட கீழே விழாது என்கிறார் போகர். ஆச்சர்யமான தகவல்தானே..... இன்றைய நவீன நீர்மவியலில் (Hydraulics) இம் மாதிரியான தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தி அவற்றை பயன்படுத்திட முடியுமானால் மனித குலத்துக்கு நல்லதுதானே... சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...

மழையில் நனையாதிருக்க போகர்.......மந்திரங்கள்

சித்தர்கள் இராச்சியம் ▼ 6 Aug 2012 மழையில் நனையாதிருக்கும் உபாயம் இயல்பில் சித்தர்கள் வெகுசன வாழ்விடங்களில் இருந்து விலகியே வாழ்ந்திருந்தனர். தங்களுடைய அக மற்றும் புறத் தேடல்களுக்கு மனித சஞ்சாரமற்ற தனிமையான இடங்களே அவசியமாக இருந்தன. இதன் பொருட்டே காடுகள், மலைகள் என இயற்கையின் மடியில் வாழ்ந்திருந்தனர். இம்மாதிரியான இடங்களில் புயல், மழை, இடி, மின்னல் போன்ற இயற்கையின் கூறுகளிடம் இருந்து காத்துக் கொள்வதற்கென சில உபாயங்களை சித்தர்கள் பயன் படுத்திவந்தனர். அவற்றில் இன்று மழையில் இருந்து காத்துக் கொள்வதற்கென போகர் அருளிய உத்தியினை பார்ப்போம். இது ஒரு தகவல் பகிர்வே, இதன் உண்மைத் தன்மை ஆய்வுக்கு உரியது. இந்த தகவல் போகர் அருளிய "போகர் ஜெனன சாகரம்" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.. நேரென்ற நாகரச ந்தன்னை யெடுத்து நெறியாக விடுத்தாவின் பாலிற்போடு காரென்ற கட்டியதா யிருகிப்போகும் கருவான யிருபத்தேழு மணியுஞ்செய்வாய் சீரென்ற ருத்ராட்சங் கூடச்சேர்த்து செபமாலை முடித்துநீ சிரசிற்போடே போட்டுநீ மழைதனிலே போனாயானாற் புகழான மழைத்துளிதான் மேல்விழாது - போகர். நாகரசத்தை எடுத்து பசுப்பாலில் போட்டால் அது கட்டியாக இறுகிவிடுமாம். இறுகியதும் அதனை எடுத்து இருபத்தி ஏழு மணிகளாக உருட்டிக் கொள்ள வேண்டுமாம். அந்த மணிகளுடன் இருபத்தி ஏழு உருத்திராட்ச மணிகளும் சேர்த்து ஒரு ஜெப மாலையைப் போன்று ஒருமாலை தயார் செய்துகொள்ள வேண்டுமாம். பின்னர் மழை நேரங்களில் அந்த மாலையைத் தலையில் அணிந்துகொண்டு சென்றால் மழைத்துளி உடம்பில் விழாது என்கிறார். ஆச்சர்யமான தகவல்தானே.! இந்த தகவலின் பின்னாலிருக்கும் அறிவியல் ஆய்வுக்கு உட்பட்டது. எனவே இதனை ஒரு தகவலாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன். சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...

விடத்தலை கற்பம்....போகர்......

சித்தர்கள் இராச்சியம் ▼ 15 Feb 2013 போகர் அருளிய விடத்தலைக் கற்பம் எளிய வகை காய கற்பங்களின் வரிசையில் இன்று “விடத்தலை கற்பம்” பற்றி பார்ப்போம். கற்ப வகைகளைப் பற்றி முன்னரே பல பதிவுகளில் விரிவாக விளக்கியிருப்பதால் இன்று நேரடியாக கற்பத்தைப் பற்றி பார்ப்போம். புதியவர்கள் மற்றும் தேவையுள்ளோர் கற்பங்களைப் பற்றிய பழைய பதிவுகளை இந்த இணைப்பில் வாசிக்கலாம். விடத்தலை என்பது மர வகையினைச் சேர்ந்த ஒரு மூலிகை. நவகோள்களில் ஒன்றான சனியின் அம்சமாய் இந்த மரத்தினை குறிப்பிடுவர். இந்த மரத்தின் தாவரவியல் பெயர் “mimosa cinerea” என்பதாகும். இந்த மரம் பற்றிய மேலதிக விவரங்கள் இங்கே அறியலாம். விடத்தலை கற்பம் என்பது மரணத்தை வெல்லும் அல்லது உடலை அழியாது காக்கும் தன்மையுடையது என யாகோபு முதல் பல சித்தர்கள் கூறியிருக்கின்றனர். யாகோபு அருளிய விடத்தலை கற்பம் பற்றி ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன். இன்றைய பதிவில் இடம் பெறும் விடத்தலை கற்பத்தின் செய்முறை போகர் அருளியது. இந்த தகவல் போகர் அருளிய "போகர் 7000" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. மாறவே விடத்தேரின் வேர்ப்பட்டைவாங்கி மருவநன்றா யிடித்தரித்துச் சூரணமாக்கி தாறவே பலம்நாலு நிறுத்தக்கொண்டு தளுக்கான சூதமது பலந்தானாலு கூறவே குலாமல்லிச் சான்றினாலே குலாவியரைத் தெண்சாமம் சூரணித்து தேறவே நாற்பது நாள் தேனிர்கொள்ளு சில்விஷமாம் பதினெட்டுக் குட்டம்போகும் விண்டிடவே வெள்ளெழுத்து மாறிப்போகும் மாசற்ற வயிரம்போல் தேகமாமே மருத்துவ குணங்கள் நிரம்பிய இந்த விடத்தலை மரத்தின் வேர் மற்றும் பட்டையை எடுத்து நன்கு இடித்துச் சூரணமாக செய்து கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்தச் சூரணத்தில் இருந்து நான்கு பலம் அளவு எடுத்து, அதனுடன் இரசம் நான்கு பலம் சேர்த்து, மேலும் குலாமல்லிச் சாறு விட்டு, எட்டுச் சாமம் வரை தொடர்ந்து அரைக்க வேண்டுமாம். பின்னர் இந்த கலவையை நிழலில் உலர்த்தி சூரணமாகச் செய்து கொள்ள வேண்டும் என்கிறார். தினமும் இந்த சூரணத்தில் இருந்து வெருகடி* அளவு எடுத்து தேனில் கலந்து உண்ண வேண்டுமாம். இவ்வாறு தொடர்ச்சியாக நாற்பது நாட்கள் உண்டு வந்தால் உடலானது மாசற்ற வைரம்போல் வலிமை பெறுவதுடன், பதினெட்டு குட்டங்களும் நீங்கி, வெள்ளெழுத்தும் மாறிப்போகும் என்கிறார். *வெருகடி = வெருகு என்பது காட்டுப் பூனையை குறிக்கும். வெருகடி என்பது பூனை தன் காலில் உள்ள பெருவிரல் உள்ளிட்ட மூன்று விரல்களினால் எடுக்கும் மண்ணின் அளவு. பழந்தமிழர் அளவை குறியீடுகளில் வெருகடியும் ஒன்று. சூரணம் - ஈரமானவைகளை காய வைத்தும், காயந்தவைகளை சுத்தமாக்கியும், வறுக்க வேண்டியவைகளை வறுத்தும் இடித்தோ அரைத்தோ பொடியாக்கி சலித்து எடுத்துக் கொள்வது. சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..

ஓரிதல் தாமரை.....கற்பம்

சித்தர்கள் இராச்சியம் ▼ 12 Nov 2012 எளிய காயகற்பம் - "ஓரிலைத் தாமரைக் கற்பம்" நோயை தீர்ப்பதை விடவும் நோய்க்கான காரணத்தை அறிந்து அதனை தீர்ப்பதில்தான் சித்த மருத்துவம் கவனம் செலுத்துகிறது. நம் உடலை வளர்க்கத் தேவையான உணவையே மருந்தாகச் சொல்வதுதான் சித்த மருத்துவத்தின் சிறப்பு. இந்த வகையில் உடலை நோய் அணுகாமல் பொலிவுடன் காத்து, மாறா இளமையுடனும், வலிவுடனும் இருக்கச் செய்ய சித்தர்கள் அருளிய பல்வேறு கூறுகளில் ஒன்றுதான் கற்ப வகைகள். சித்தர்கள் பல நூறு வகையான கற்ப வகைகளை நமக்கு அருளிச் சென்றிருக்கின்றனர். நம் முன்னோர்களின் இந்த அரிய செல்வங்களின் பெருமையை உணராமல், அவற்றை போற்றிப் பாதுகாத்து மேம்படுத்த தவறிவிட்டோம்.இந்த கற்ப வகைகளைப் பற்றி முன்னரே பல பதிவுகளின் ஊடே விரிவாகவும் விளக்கமாகவும் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் எளிமையான கற்ப வகைகளை தொகுக்கும் தொடர் முயற்சியாக இனி வரும் நாட்களில் சில கற்பவகைகளை பகிர்ந்து கொள்கிறேன். இந்த கற்ப வகைகளில் குறிப்பிடப் பட்டிருக்கும் சரக்குகள் யாவும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கக் கூடியவை. அலோபதி மருந்துகளோடு ஒப்பிடுகையில் விலையும் மலிவுதான். தகுந்த சித்த மருத்துவரின் ஆலோசனை மற்றும் வழி காட்டுதலோடு இந்த கற்பவகைகளை பயன்படுத்திட வேண்டுகிறேன். இனி இன்றைய பதிவில் "ஓரிலைத் தாமரைக் கற்பம்" பற்றி பார்ப்போம்.இந்த தகவல் "போகர் 7000" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. ஏமமாம் ஓரிலைத்தா மரைச்சமூலம் இடித்துமே சூரணித்துவெருகடி நெய்யில்கொள்ளச் சோமமாய் உடம்பில் நின்ற வேகமெல்லாம் சிதைந்துமே விட்டுப்போம் சிறுநீரில்தானும் காமமாய் குளிர்ந்துவிடும் கண்புகைச்சல் காமாலை வறட்சியொடு கடியபித்தம் வாமமாய் போய்விடுமண் டலந்தான்கொள்ளு மகதான ரோகம்மாறி காயசித்தியாமே ஓரிலைத் தாமரை சமூலத்தை (சமூலம் என்பது ஒரு தாவரத்தின் வேர், தண்டு, இலை, காய், பூ, விதை என அனைத்தும் சேர்ந்தது) எடுத்து நன்கு காயவைத்து இடித்து சூரணமாகச் செய்து, சேமித்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அதில் வெருகடி(வெருகு என்பது காட்டுப்பூனை. அதன் பாதம் பதியும் அளவு வெருகடி எனப்படும். சித்த மருத்துவத்தில் வெருகடி என்பது ஒரு அளவையாக குறிக்கப் படுகிறது.) அளவு எடுத்து நெய்யில் குழைத்து ஒருமண்டலம் தொடர்ந்து உண்ண வேண்டுமாம். இவ்வாறு ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து உண்டால் கொடிய நோய்கள், பித்தம், வறட்சி, காமலை, கண் புகைச்சல் அனைத்தும் நீங்கி விடும் என்கிறார். மேலும் நமது உடம்பில் இருக்கும் தீயவை எல்லாம் சிதைவடைந்து சிறுநீருடன் வெளியேறிவிடுமாம். அத்துடன் காயசித்தியும் கைகூடும் என்கிறார். நண்பர்கள் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த தீபத் திருநாள் வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல குருவருள் அனைவரின் வாழ்விலும் நன்மையை கொண்டு வந்து சேர்க்க பிரார்த்திக்கிறேன்.